
சென்னை வடநூம்பல் அருகே பிள்ளையார் கோவில் பகுதியில் ஜெயா(58) என்பவர் வசித்து வந்தார். இவர் வேலப்பன் சாவடியில் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவர் வழக்கம்போல் காலையில் கடைக்கு செல்வதற்காக வேலப்பன் சாவடி சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது தி.நகரிலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று அவ்வழியாக வந்தது.
இந்த பேருந்து எதிர்பாராத விதமாக ஜெயாவின் மீது மோதியது. இதில் ஜெயா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயாவின் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்பு காவல்துறையினர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆனந்தம் (48) என்பவரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.