திடீர் மயக்கம் காரணமாக கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வீடு திரும்பினார்.

இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன் அவர்கள் இன்று (30.08.2023) அதிகாலை நடை பயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும் போது, தலைசுற்றல் ஏற்பட்டது. உடனடியாக கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது.

பரிசோதனையின் அடிப்படையில் அவர் தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு இருதய இரத்த நாள பரிசோதனை செய்ததில் குறிப்பிடத்தக்க அடைப்பு எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை போதுமானது என்று முடிவு எடுக்கப்பட்டு இன்று மதியம் 2.10 மணியளவில் மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பினார்.