அமெரிக்கா, ஈரானின் 3 முக்கிய அணுசக்தி மையங்களை தாக்கிய அதிரடி நடவடிக்கைக்கு பதிலடி வழங்கும் வகையில், ஈரான் இஸ்ரேல் மீது நேரடி ஏவுகணைத் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேல் மீது 30க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளன. இந்த தாக்குதலில் ஒரு ஒருவருக்கு  பலத்த காயமும், 15 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இரு குழந்தைகள் டெல் அவிவில் உள்ள இச்சிலோவ் மருத்துவமனையில் சிறிய காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் பலரும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலில் பல பகுதிகளில் சைரன்கள் ஒலித்ததால், மக்கள் பதற்றமடைந்து ஹோம் ஃப்ரண்ட் கையேட்டின் வழிகாட்டலின்படி பங்கர் பகுதிகளுக்கு ஓடினர்.

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் சில மணி நேரத்திலேயே இந்த நேரடி பதிலடி தாக்குதல் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் பதற்றம் மேலும் தீவிரமாகியிருக்கிறது. உலக நாடுகள் இந்த தாக்குதல்களை மிக கவனத்துடன் பார்வையிட்டு வருகின்றன.