மத்திய கிழக்கில் நிலவும் அதீத பதட்ட சூழ்நிலையில், அமெரிக்கா ஈரானின் அணுசக்தி செறிவூட்டல் மையங்களை ட்ரோன் விமானங்கள் மூலமாக தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் அரசு ஊடகங்கள் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளன. “ட்ரம்பால் தொடங்கப்பட்ட இந்த போரை, ஈரான் முடிவுக்கு கொண்டு வரும்” என அந்த நாடு தொலைக்காட்சியின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், “அமெரிக்கா, ஈரானின் வான்வெளியை அத்துமீறி நுழைந்து பெரும் தவறை செய்துவிட்டது. இத்தகைய அத்துமீறல்கள் மேற்கு ஆசியாவில் அனுமதிக்கப்படாது” எனவும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் அனைத்தும் கவனத்தில்!

மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்கா பல முக்கிய இராணுவ தளங்களை வைத்திருக்கிறது. கத்தாரில் உள்ள ‘அல் உதெய்த்’ விமான தளம், பஹ்ரைனில் உள்ள ஐந்தாவது கடற்படை, ஈராக்கின் ‘அல் அசாத்’ மற்றும் ‘ஹரிர்’ விமானத் தளங்கள், சிரியாவில் உள்ள ‘அல் தன்ஃப் காரிசன்’ தளம், குவைத்தில் உள்ள ‘அலி அல்-சலேம்’ விமானத் தளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ‘அல் தஃப்ரா’ விமானத் தளம் ஆகியவை முக்கியமானவை. இதில், பஹ்ரைனில் மட்டும் 9,000 இராணுவ வீரர்களும், கத்தாரில் 10,000 வீரர்களும் நிறைவே முகாமிட்டு உள்ளனர். மொத்தம் 40,000 வீரர்கள் மத்திய கிழக்கின் 19 தளங்களில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

“நாங்கள் கையாள்வோம்” – மீண்டும் கடும் எச்சரிக்கை

மேலும் ஒரு ஈரானிய ஊடகவியலாளர், “போர் இப்போது தான் தொடங்கியுள்ளது. ட்ரம்ப் அவர்களே, அமைதி குறித்து இப்போது பேசுகிறீர்களா? உங்கள் பொறுப்பற்ற நடவடிக்கையின் விளைவுகளை நீங்கள் உணர்வீர்கள். நாங்கள் உங்களை அதற்கேற்ப கையாள்வோம்” என நேரடி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதற்கு முன்பே, ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனியும், “ஈரானின் வரலாற்றையும் மனப்பான்மையையும் அறியாதவர்கள் தான் இவ்வாறு கொக்கரிக்கிறார்கள்” என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் தற்போதைய மோதல்களின் உச்ச நிலை,   பெரும் போர் சூழ்நிலைக்குள் இழுத்து  செல்லும் அபாயத்தை உருவாக்கி விட்டது.