
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கடம்பூர் காவல் நிலைய எல்லை பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று போலீசாரையும் பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சாலையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு அடையாளம் தெரியாத உடலை, குடும்பத்தினர் தவறாக அடையாளம் காண, போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். ஆனால் மறுநாள் அந்த இளைஞர் உயிருடன் காவல் நிலையத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
கடம்பூர் பகுதியில் சாலையோரத்தில் கிடந்த அந்த உடலை போலீசார் வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இதுருக் கிராமத்தைச் சேர்ந்த சுமன் என்ற பெண், அது தன் சகோதரர் அஜய் சங்க்வாரின் உடலாக இருக்கலாம் என கூறினார்.
உடலில் இருந்த சிவப்பு சட்டையும், கருப்பு பேன்டும் அவரது உடைகளுக்கு ஒத்ததாக இருந்ததால், உடல் அடையாளம் காணப்பட்டது. உடனடியாக பிரேத பரிசோதனைக்காக உடல் அனுப்பப்பட்டது.
ஆனால் அதே சமயம், செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அஜய், விவகாரத்தை கேட்டு நேரில் காவல் நிலையம் வந்து, “நான் தான் அஜய், உயிருடன் இருக்கிறேன்” என தெரிவித்தார்.
அஜய் தனது வீட்டாரை வாரத்திற்கு ஒரு முறை வேறு ஒருவரின் கைப்பேசியில் தொடர்புகொள்வதாகவும், தனக்கு கைபேசி இல்லையெனவும் கூறினார். உடனடியாக பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டது.
இப்போது அந்த உரிமை கோரப்படாத உடலின் உண்மையான அடையாளத்தை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற தவறான அடையாளம் காண்பது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.