
உத்திரபிரதேச மாநிலம் ரத்தன் கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் தினேஷ் என்ற வாலிபர் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தண்ணீரில் மூழ்கி தினேஷ் உயிரிழந்தார். நேற்று தினேஷின் குடும்பத்தினர் அவரது உடலை மீட்டு படகு மூலமாக கரைக்கு திரும்பி கொண்டிருந்தனர். மற்றொரு படகில் தினேஷின் குடும்ப உறுப்பினர்கள் 16 பேர் பயணம் செய்தனர். தினேஷின் உடலை எடுத்து வந்த படகு கரையை சேர்ந்தது. ஆனால் மற்றொரு படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் படகில் வந்த அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் குழந்தைகள் உள்பட 13 பேரை உயிருடன் மீட்டனர். இதனையடுத்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களை மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.