
செயற்கை நுண்ணறிவுக்கான (AI) அதிகரித்த முதலீடுகளின் விளைவாக, உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட், தனது ஊழியர்களை நெறிப்படுத்தும் நடவடிக்கையாக, சமீபத்தில் சுமார் 6,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
இது, கடந்த மே மாதத்தில் நடைபெற்ற முந்தைய பணி நீக்கத்திற்கு பிறகு தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். புதிய தகவல்களை ப்ளூம்பெர்க் நியூஸ் வெளியிட்டுள்ளது.
AI தொழில்நுட்பங்களில் விரைவான வளர்ச்சியையும், போட்டித் தன்மையில் முன்னிலை வகிக்க வேண்டும் என்பதையும் அடிப்படையாகக் கொண்டு, மைக்ரோசாப்ட் நிறுவனம் விற்பனை மற்றும் பிற சார்பு துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிதியாண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம் 80 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை AI சேவைகள் தொடர்பான தரவு மையங்கள் மற்றும் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்கியுள்ளது. இது, நிறுவனத்தின் AI துறையில் கட்டுமான திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.
இதேபோல், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸியும், ஜெனரேட்டிவ் AI மற்றும் அதன் பயன்பாடுகள், வருங்காலத்தில் நிறுவனத்திலுள்ள மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என்று கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிதியாண்டு முடிவடைந்ததைத் தொடர்ந்து, அடுத்த மாத தொடக்கத்தில் மேலும் பணிநீக்க அறிவிப்புகள் வெளிவரும் என்று ப்ளூம்பெர்க் அறிக்கை கூறியுள்ளது. இது விற்பனை குழுக்களை மட்டுமின்றி பிற துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2023 ஜூன் மாத நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் மொத்தம் 2,28,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மேற்கொள்ளப்பட்ட வேலையிழப்புகள், தொழில்நுட்ப துறையில் நிலவும் பெரிய மாற்றங்களின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனம், Reuters நிறுவனத்தின் கருத்துக் கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.