
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தருவை பனங்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, மூவரும் முன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(35), லட்சுமணன்(25) மற்றும் பண்டாரம்(20) என்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் சோதனை செய்த போது அவர்களிடம் 120 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது.
அந்த போதைப் பொருள்களை அதிக விலைக்கு வாங்கி விற்பனை செய்வதற்காக வைத்து இருந்தாக மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர். பின்பு மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த கஞ்சா,கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது தனி கவனம் செலுத்தி திருநெல்வேலி மாவட்ட காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். சட்டத்திற்கு புறம்பாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்தாலோ, வாங்கினாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ் பி பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளார்.