
உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 17 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை நீதிபதி மகேஷ் சந்திர திரிவாதி, பிரசாந்த் குமார் ஆகியோர் விசாரித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தற்போது சிறுமி 19 வார கர்ப்பிணியாக உள்ளார். மைனர் என்பதால் குழந்தையை பெற்று வளர்க்கும் அளவுக்கு சிறுமி முதிர்ச்சியடையவில்லை. அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது சிறுமிக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என வாதம் செய்தார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பெண் தனது கருவை கருக்கலைப்பு செய்வதை தடுப்பதும், குழந்தை பெற அனுமதிப்பதும் அவரது அடிப்படை மனித உரிமைகள். எனவே அந்த குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமா கர்ப்பத்தை கலைக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் உரிமை சிறுமிக்கு உள்ளது. மருத்துவ கருத்தரிப்பு சட்டத்தின் பிரிவு 3( 2 )-ன் கீழ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நபர் மருத்துவ ரீதியாக கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என நீதிபதிகள் கூறினர். மேலும் மைனர் பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.