திருவண்ணாமலை மாவட்டம், கீர்பெனாத்தூர் அருகே கரிக்கலாம்பாடி கிராமத்தில், தாயும், அவரது ஒன்றரை வயது குழந்தையும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கரிக்கலாம்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் – உமாதேவி தம்பதியர் இருவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தை மேகனாஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், உமாதேவி தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார்.

விவசாய கிணற்றில் தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய கீர்பெனாத்தூர் போலீசார், அதிர்ச்சியூட்டும் தகவலை உறுதி செய்துள்ளனர்.

அதாவது, உமாதேவிக்கு மீண்டும் பெண் குழந்தை பிறக்கப்போகிறது என்பதை ஸ்கேன் மூலம் அறிந்ததும், அவரது கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேல், மாமியார் சிவகாமி ஆகியோர், கருக்கலைப்பு செய்வதற்காக உமாதேவியை வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது.

இதற்காக, ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக ஸ்கேன் செய்ததாகவும், அதன்பின் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் மூலம் கருக்கலைப்பை முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த உமாதேவி, தனது பெண் குழந்தையுடன் சொந்த விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் தொடர்பாக உமாதேவியின் கணவர் விக்னேஷ், மாமனார் ஜெயவேல், மாமியார் சிவகாமி மற்றும் கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.