உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் நிபோரா பகுதியில் உள்ள தண்டனியபுரா கிராமத்தில் புதன்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெற்ற மதவிருந்து (பந்தாரா) நிகழ்ச்சியில், அண்டை வீட்டாரான ரவி மற்றும் துக்மான் ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இரண்டு தரப்பினரும் கோபத்தில் ஒரு மீது ஒருவர் செங்கற்கள் வீச ஆரம்பித்தனர். அப்போது ரவி எதிர்த்தரப்பினரை சிக்க வைக்க தனது தந்தை லகன் சிங்கை வீட்டின் கூரையில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், லகன் சிங் கூரையில் இருந்து மற்றவர்கள் மீது கற்கள் வீச முயற்சி செய்ததும், பின்னர் தள்ளப்பட்டு கீழே விழுந்ததும் தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கூறுவதாவது, “ரவி, எதிர் தரப்பினரை சிக்க வைக்க திட்டமிட்டு தன் சொந்த தந்தையையே கூரையிலிருந்து தள்ளியுள்ளார்” என குற்றம் சாட்டியுள்ளனர்.

தகவல் அறிந்த நிபோரா போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த லகன் சிங்கை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இரு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு, தற்போதைக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.