திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மண்ணெண்ணெய் கடை உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளராக இருந்த பெண் ஆகியோரை கைது செய்தனர். ஆரணி அருகே உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இந்த சிறுமி தினமும் பள்ளிக்கு வேனில் சென்று காஜிவாடை பகுதியில் இறங்கி வீட்டிற்கு நடந்து செல்வது வழக்கம்.

சம்பவ நாளில், காஜிவாடை பகுதியில் நின்று சிறுமியை பார்த்த ராஜேஸ்வரி (57) எனும் பெண், “ஜனார்தனன் கடைக்கு சென்றால் சாக்லேட், பிஸ்கட் தருவார்” என கூறி சிறுமியை கடைக்குச் செல்ல வலியுறுத்தியதாக தெரிகிறது. அவ்வாறு சென்ற சிறுமியை, கடை உரிமையாளர் ஜனார்தனன் (55) கடையின் உள்ளே அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் அங்கு ஓடி வந்த போது, ஜனார்தனனின் இந்த கொடுமை தெரியவந்தது. உடனே சிறுமியை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியின் தாய் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கடை உரிமையாளர் ஜனார்தனன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜேஸ்வரியை கைது செய்து, போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.