கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பழங்கூர் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீன த்ரிஷா என்ற 19 வயது மகள் இருந்துள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி கல்லூரிக்கு வீட்டில் இருந்து கிளம்பி சென்றார்.

இந்நிலையில் மாணவி மதியம் உணவு இடைவேளையின் போது கல்லூரியின் மூன்றாவது மாடிக்கு சென்றார். அப்போது திடீரென மாணவி அங்கிருந்து கீழே குதித்து விட்ட நிலையில் அவருக்கு அதில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்து சக மாணவிகளும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்த நிலையில் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்த மாணவிக்கு உடல்நல பாதிப்பு இருந்ததும் மருத்துவமனைகளில் அதற்காக சிகிச்சை பெற்றும் சரி வராததும் தெரிய வந்தது. இதனால் மன வேதனையில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.