உத்திரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள டிடௌலி பகுதியில், மனிதத்தன்மையற்ற செயல் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர், நாய் குட்டியின் கழுத்தை பிடித்து,  குச்சி மூலம் அடித்து, பின்னர் சாலையில் வீசுவதைக் காட்டும் காணொளி வைரலாகியுள்ளது. அருகே இருந்த அதன் தாய் நாய் நிலைகுலைந்து பார்த்துவிட்டு வேதனைத்துடன் நின்றது.

இந்தக் கொடூரக் காட்சிகள் சாட்சியாக அருகில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இதனைப் பார்த்த பல்வேறு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நாயின் மீது காட்டமான தாக்குதல் நடத்திய இந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் விசாரணை நடத்தினர்.

இதனடிப்படையில், குற்றவாளி கைது செய்யப்பட்டு, விலங்கு வன்முறை தடுப்பு சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என போலீசார் உறுதியளித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் விலங்குகளின் மீது தொடர்ந்து நடைபெறும் வன்முறையை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரபரப்பை கிளப்பியுள்ளது.