
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டா பீட்டா-2 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரிவு 36-இல் உள்ள சுனில் பிரதான் என்பவரது வீட்டில் கழிப்பறை வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மாடல் கழிப்பறையை பயன்படுத்திய 20 வயது ஆஷு நாகர் என்ற இளைஞர், ஃப்ளஷ் அழுத்தியவுடன் திடீரென கழிப்பறை வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் ஆஷுவின் முகம், கைகள், கால்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகள் தீக்காயமடைந்தன. உடனடியாக அவரை குடும்பத்தினர் JIMS மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து மீத்தேன் வாயு குவிந்து ஏற்பட்ட வெடிப்பாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வீட்டின் கழிப்பறைக்கும் சமையலறைக்கும் இடையில் ஏசி எக்ஸாஸ்ட் அமைந்திருப்பதாகவும், அதன்மூலம் வாயு வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கலாம் என பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை சுனில் பிரதான் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக கழிப்பறை முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என்றும், வசதிகள் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். நகராட்சியின் கால்வாய் பராமரிப்பு முறைகள் மிக மோசமாக உள்ளன என்றும், நீண்ட நாட்களாக கழிவுநீர் குழாய்கள் பழுதாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்
பி-3 ரவுண்டானா அருகே உள்ள ஹோட்டலின் அருகாமையில் உள்ள கழிவுநீர் குழாய் கடந்த 1.5 ஆண்டுகளாக பழுதாகவே இருக்கிறது என்றும், அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை ஆரம்பித்துள்ளனர். நகராட்சி அதிகாரிகளும் தற்போது சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, அனைத்து குடியிருப்புகளிலும் கழிவுநீர் மேலாண்மை மற்றும் காற்றோட்ட வசதிகள் முறையாக இருக்க வேண்டியது அவசியம் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.