கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மடப்புரம் பகுதியில் அர்ஜுனன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிதா என்ற மகள் இருந்த நிலையில் இவருக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் நடந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த அபிதாவை திடீரென அவரது தந்தை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் துடிக்க துடிக்க கொலை செய்துள்ளார். இதில் அந்த இளம் பெண் இரத்த வெள்ளத்தில் துடித்துடித்து உயிரிழந்த நிலையில் பின்னர் அர்ஜுனன் தலைமறை வாகிவிட்டார்.

இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் அர்ஜுனனை வலைவீசி தேடி வந்த நிலையில அவர் தானாகவே சென்று சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கூலி தொழிலாளியான அர்ஜுனனுக்கு இரண்டு மகன்கள் மற்றும் பட்டதாரியான ஒரு மகள் இருந்துள்ளார். இதில் அபிதா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.

இருப்பினும் அபிதா தொடர்ந்து அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார். இது அவருடைய தந்தைக்கு பிடிக்காத நிலையில் வீட்டில் வரன் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் திருமணம் வேண்டாம் என்று அபிதா தட்டி கழித்து வந்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன் நேற்று தன்னுடைய மகளுடன் சண்டை போட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.