
தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதோடு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக 85 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பினை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்ற நிலையில் முதல்வர் ஸ்டாலினும் இது பற்றி கூறினார்.
அதாவது பொள்ளாச்சி தீர்ப்பினை வரவேற்பதாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் பொல்லாத அதிமுக நிர்வாகி உள்ளிட்டவர்களால் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது எனவும், அதிமுக கூடாரத்தை காப்பாற்ற முயன்ற சார்கள் மானம் இருந்தால் வெட்கி தலை குனியட்டும் என்றும் பதிவிட்டு இருந்தார். இதற்கு தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஸ்டாலின் அவர்களே.
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! -#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! -அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், CBI விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் POCSO வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்! என்று பதிவிட்டுள்ளார்.