திருச்சியில் காவலர் ஒருவரை மிக தரக்குறைவாக குடிபோதையில் இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது நண்பருடன் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கி வந்துள்ளார். இதனை கவனித்த அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் இளைஞர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சாவியை பறிமுதல் செய்துள்ளார். அப்போது காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர் ஒரு கட்டத்தில் எல்லை மீறி மிக தரக்குறைவாக பேசி விட்டு அவரிடம் இருந்து இருசக்கர வாகனத்தின் சாவியை பெற்றுகொண்டு அந்த இடத்திலிருந்து சென்றுள்ளார்.

இதனை பொறுமையாக தனது செல்போனில் படம் பிடித்த அந்த காவல்துறை அதிகாரி அந்த வீடியோவை மாநகர காவல்துறை ஆணையர் நுண்ணறிவு பிரிவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த இளைஞர் திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்த கதிரேசன் என்பது தெரியவந்தது இதனைத்தொடர்ந்து கதிரேசன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்போது அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் தனது தவறை உணர்ந்ததாக கதிரேசன் பேசும் வீடியோவும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.