உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பாப்ரி பகுதியில் உள்ள ஹீரன்வாடா கிராமத்தை சேர்ந்த சச்சின் குமாரின் மனைவி ஸ்வேதா (26) கடந்த சனிக்கிழமை ஒரு சாலை விபத்தில் இறந்துள்ளார். அதன் பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட கூட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அங்கு அந்தப் பெண்ணின் உடலில் இருந்த தங்க காதணிகள் காணாமல் போனதை கவனித்த குடும்பத்தினர் ஆரம்பத்தில் நகைகளை காவல்துறையினர் திருடியதாக குற்றம் சாட்டினர். ஆனால் விசாரணையின் போது, பாப்ரி க் காவல் நிலைய பெண் காவல் அதிகாரிகள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போது தங்க காதணிகள் இருந்ததாகவும், அதில் ஒரு காதணியை வார்டு பாயான விஜய் காவல் அதிகாரியிடம் ஒப்படைத்ததும் தெரியவந்தது.

மேலும் வார்டு பாய் விஜய் அந்த காதணியை தரையில் கண்டதாக கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் கிஷோர் அஹூஜாவிடம் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை காண்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் தெரிவித்ததாவது, வார்டு பாய் விஜய் இறந்த பெண்ணின் உடலில் இருந்த காதணிகளை அகற்றுவது சிசிடிவி கட்சிகளில் தெளிவாக காட்டப்பட்டது.

அது குறித்து விசாரணைக்காக அவரை அதிகாரிகள் அழைக்க முயன்ற போது அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி சென்று உள்ளார். தற்போது விபத்தில் இறந்த ஸ்வேதாவின் கணவர் சச்சின் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் ஆதர்ஷ் மண்டி காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது முறையான புகாரை சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி காவல்துறையினர் நகைகளை திருடிய வார்டு பாயை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து மருத்துவமனையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.