4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பொறுப்பேற்றுள்ளார்
கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்து கவிழ்ந்ததால் தனது முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதையடுத்து 105 சட்ட மன்ற உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா ஆட்சி அமைப்பதற்கு முயற்சிகளை செய்து வந்தது.
அதை தொடர்ந்து கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா இன்று காலை ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார். இதனை ஏற்ற ஆளுநர் மாலை 6 மணிக்கு பதவி ஏற்க வருமாறு கூறினார்.
அதன்படி மாலை 6 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பதற்காக ராஜ்பவனில் உள்ள ஆளுநரின் கண்ணாடி மாளிகைக்கு வருகை தந்தார். கர்நாடக மாநில முதலமைச்சராக எடியூரப்பாவுக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதனை கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். எடியூரப்பா 4-ஆவது முறை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.