கர்நாடக மாநில பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவையில் 3 நாட்கள் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விவாதம் நடந்து முடிந்து, பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இரவு 7.15 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சிக்கு 99 வாக்குகள் மட்டுமே பதிவானது. குமாரசாமி அரசுக்கு எதிராக 105 வாக்குகள் பதிவானது. இதனால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து பாஜக மூத்த தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பா.ஜ.க ஆட்சியமைப்போம் என்று தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்று கர்நாடக மாநில பாஜக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக எடியூரப்பா தேர்வாகிறார்.