வடக்கு புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா…? விவசாயிகள் கோரிக்கை…!!!!

நாகபட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் ஐவேலியில் 80 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு அமைந்துள்ளது. இங்கு விவசாயிகள் உளுந்து பயறு, குருவை தாளடி நெற்பயிரும் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலப்பரப்பிற்கு செல்வதற்கு வாளா மங்கலத்தில் வடக்கு புத்தாறு ஆற்றை கடந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த நிலப்பரப்பை விவசாயம் செய்வதற்கு தேவையான இடுப்பொருட்கள், நெல் அறுவடை செய்வதற்கு தேவையான எந்திரங்கள் மற்றும் உரங்கள் போன்ற அனைத்தும் ஆறு கிலோமீட்டர் திருமருகல் கிராமத்தை சுற்றி விவசாயிகள் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மூன்று தலைமுறையாக கோடை காலங்களில் மட்டும் வண்டி பாதையாக சென்று வந்த பாதையும் பொதுப்பணித்துறையினரால் கரை அடைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நெய்வேலி பகுதிக்கு செல்வதற்கு வசதியாக புத்தாறு ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.