தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாறபடுகின்றன என்பது பற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் பல கண்மாய்கள், குளங்கள் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை என்றும் நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்க நபார்டு வங்கி 500 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ள நிலையில் அது முறையாக பயன்படுத்தப்பட வில்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார்.

மேலும் தமிழகத்தில் உள்ள கண்மாய் குளங்கள், தூர்வாரும் பணியை அரசு விதிப்படி செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி, ஆகியோர் தமிழகத்தில் நீர்நிலைகள் எந்த தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தூர்வாரப்படுகிறது என்பது குறித்து தமிழக பொதுப்பணித் துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.