சுபஸ்ரீ மரணமடைந்த நிலையில் லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம் என்று தண்ணீர் லாரி உரிமையாளர் சங்கம் உறுதிமொழி எடுத்துள்ளது.
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23). வீட்டிற்கு ஒரே செல்லப்பிள்ளையான இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் பணி முடிந்து துரைப்பாக்கம் – பல்லாவரம் ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை அருகே சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.
இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது மோதியது. இதில் லாரியின் முன் டயர் அவர் மீது ஏறி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையிஅனுமதிக்கப்பட்டு சில நிமிடத்தில் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் யாரும் மறக்க முடியாத அளவிற்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உட்பட பலரும் பேனர் வைக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உறுதிமொழியெடுத்துள்ளது. அதாவது, லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம். அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை பயன்படுத்த கூடாது. உரிய ஆவணம் வைத்திருப்போம். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்று உறுதி மொழி ஏற்றுள்ளது. அத்துடன் பேனர் விழுந்து தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.