பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது, கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போட மாட்டேன். கட்சியின் மாநில தலைவர் என்ற முறையில் மே மாதம் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து பாஜக, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விருப்பமில்லை. பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில் அண்ணாமலையின் இந்த பேச்சு தற்போது பாஜகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் அண்ணாமலையின் பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது, அதிமுக தான் தமிழ்நாட்டில் கூட்டணியை முடிவு செய்யும். கூட்டணிக்கு தலைமை ஏற்கும். யாருடன் கூட்டணி யாருக்கு எத்தனை சீட்டு கொடுக்க வேண்டும் என்பதை அதிமுக கட்சி தான் முடிவு செய்யும் என கூறியுள்ளார்.