வேலூர் மக்களவைத் தொகுதியில் குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து திமுக கட்சியை சேர்ந்தவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி அன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தீவிர பிரச்சாரங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேலூரில் திமுகவை ஆதரித்து குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து வித்தியாசமான முறையில் திமுக பேச்சாளர் வாக்கு சேகரித்து வந்தார். அதில் நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று முழக்கமிட்டுக் கொண்டே திமுகவிற்கு வாக்கு சேகரித்து வந்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேல் இவ்வகையான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்