கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி விஜய் மல்லையா ஆவார். இவர் ஐடிபிஐ வங்கியிலிருந்து சுமார் 7,500 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனை அவர் திரும்பி செலுத்தாததால் அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து சிபிஐ போலீசார் இந்த வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறி இருப்பதாவது “விஜய் மல்லையாவுக்கு வரைமுறை இல்லாமல் அளவுக்கு மீறி கொடுக்கப்பட்ட கடன் சுமார் 7500 கோடி ரூபாய் மூலம் அவர் ஐரோப்பாவில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளார்.
மேலும் ஸ்விட்சர்லாந்தில் தனது குழந்தைகள் பெயரில் இயங்கும் அறக்கட்டளைக்கு பணப்பரிமாற்றமும் செய்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடுத்த போதே அவருடைய வங்கி கணக்கில் கடனை திரும்பி செலுத்துவதற்கு தேவையான பணம் இருந்துள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் மல்லையாவிற்கு அளவுக்கு மீறி கடன் கொடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் அப்போதைய பொது மேலாளரான புத்ததேவ் தாஸ்குப்தாவின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் இணைக்கப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.