வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி தாலுகா சேனூர் கிராமத்தில் வசிப்பவர் அன்பழகன், ஆட்டோ டிரைவர். இவரது மகன் துரை சரவணன் (12), வஞ்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து முடித்துள்ளான். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவன் (14) அரசு உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து முடித்துள்ள நிலையில், துரைசரவணனும், அந்த மாணவனும் நண்பர்கள் ஆவர். எனவே இவர்கள் இருவரும் கோடை விடுமுறை என்பதால் நேற்று சேனூர் கிராமத்தில் கேரம் விளையாடிய போது, துரை சரவணனுக்கும், அந்த மாணவனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின் ஆத்திரத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிய நிலையில், அந்த மாணவன் பலமாக தாக்கியதில் துரைசரவணன் அங்கேயே சுருண்டு விழுந்து பலியானதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்து பயந்த அந்த மாணவன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், இந்த சம்பவம் குறித்து அங்குள்ள போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, இறந்த மாணவன் துரை சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.