கொரோனா அச்சுறுத்தலால் 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,700க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அடுத்த 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டதுடன், கொரோனா பாதிப்பு கோடை காலம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 10 பேருக்கு மேல் கூட்டாக சேர்ந்து நிற்க வேண்டாம் எனவும், ஹோட்டல்கள், பார்கள், உடற்பயிற்சிக்கூடங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்திய டிரம்ப், கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.