கட்சியை பதிவு செய்யும் வரை எந்த ஒரு தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடாது என்று ttv தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேலூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எந்த ஒரு வேட்பாளரும் போட்டியிடவில்லை. மேலும் நான்குநேரி தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுமா என்ற விவாதம் அரசியல் களத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறுகையில்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் கட்சியை பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்சியை பதிவு செய்தால்தான் நிலையான சின்னம் கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் அனைத்து இடங்களிலும் ஒரே சின்னத்தை வைத்துக்கொண்டு போட்டியிட முடியும். ஆகையால் கட்சியை முறையாக பதிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற்றப்பட்டு நிலையான சின்னத்தை பெற்ற பின் நாங்குநேரி இடைத்தேர்தல் மட்டுமல்ல எந்த ஒரு தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணிச்சலுடன் களத்தில் நின்று போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.