மணல் கொள்ளை…. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து தடுக்குமா?…. சிரமத்திற்கு உள்ளாகும் பொதுமக்கள்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லை பகுதியாக பேராயம்பட்டு, வாழவச்சனூர், அகரம்பள்ளிப்பட்டு, சதாகுப்பம், பழையனூர், ஆத்திபாடி உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்கு அதிகளவில் இரவு நேரங்களில் மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.   இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பேராயம்பட்டு மலை அடிவாரப் பகுதிகளில் மாலை நேரம் முதல் இரவு முழுவதும் தொடர்ந்து மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூக்கம் இன்றி கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் பொதுவாக ஏரிகளில் மண் அள்ளுவதற்கும், மற்ற இடங்களில் முரம்பு மண் உள்ளிட்டவைகள் எடுப்பதற்கும் வருவாய் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு தான், நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 நடை மண் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும். ஆனால் கடந்த சில மாதங்களாக எந்த ஒரு அனுமதியும் இன்றி, நூற்றுக்கணக்கான வாகனங்களில் இப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதிகள் மணலை கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் எங்களுக்கு எந்த சம்பந்தமில்லை என்றும் நீங்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவியுங்கள் என்கின்றனர். இதே போல் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறினால், அவர்களும் எங்களுக்கு தெரியாது என அலட்சியப்  படுத்துகின்றனர். இதனால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்து வருவது மட்டுமல்லாமல், காலை முதல் மாலை வரை விவசாய நிலங்களிலும் கூலி வேலைகளுக்கும் சென்று வரும் மக்களால் நிம்மதியாக தூங்க கூட முடியவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் மணல் அள்ளபடுவதை தடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை  வைத்துள்ளனர்.