கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற கலவரத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே காரணம் என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று மாலை பா.ஜ.க தலைவர் அமித் ஷா பேரணி நடத்தினார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து வந்த அமித்ஷா கல்லூரி சாலைக்குள் பேரணியுடன் நுழைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவ அமைப்பினர் கருப்பு கொடி காட்டி அமித்ஷா திரும்பி போ என்று கோஷமிட்டனர். பல்கலை கழக மாணவர்கள் விடுதி அருகே திரிணாமுல் காங்கிரஸ் மாணவர்கள் அமித்ஷா இருந்த பிரசார வாகனத்தின் மீது கற்களையும் கம்புகளையும் வீசினர். இதனால் பேரணியில் வந்த பாஜகவினருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் மாணவ அமைப்பினருக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமாக வெடித்தது.

இந்த கலவரத்தில் சாலையோரத்தில் இருந்த பேனர்கள் அடித்து கிழித்து நாசப்படுத்தப்பட்டன. பாஜகவினர் மோட்டார் சைக்கிள், சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்தனர். விடுதிக்கு வெளியே தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையை உடைத்தனர். இதையடுத்து அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தியதால் கூட்டம் கலைந்து சென்றது. இதையடுத்து அப்பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. இந்த வன்முறை குறித்து கருத்து தெரிவித்த மம்தா, பாஜக வெளியில் இருந்து குண்டர்களை வரவழைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக கடுமையாக சாடினார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, கொல்கத்தாவில் நடந்த வன்முறைக்கு காரணம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே தவிர பாஜக அல்ல என்று தெரிவித்தார். மேலும் “ பாஜக அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுகிறது. ஆனால், எங்கும் வன்முறை நடந்தது இல்லை. ஆனால், நேற்று மேற்கு வங்காளத்தில் மட்டும் வன்முறை நடந்துள்ளது.
இந்த வன்முறை மூலம் அனுதாபம் பெறுவதற்காகவே தத்துவ மேதை வித்யாசாகர் சிலையை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குண்டர்களே சேதப்படுத்தியுள்ளனர். சி.ஆர்.பி.எப் வீரர்கள் மட்டும் வரவில்லையென்றால் நான் காயம்படாமல் தப்பியிருக்க முடியாது. மேற்கு வங்காளத்தில் நடைபெறும் வன்முறை குறித்து தேர்தல் ஆணையம் மெளனம் காத்து வருகிறது. குற்றத்திற்கு காரணமானவர்கள் தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படவில்லை. தேர்தல் கமிஷன் இரட்டை நிலைப்பாட்டுடன் நடந்து கொள்கிறது” என்றார்.