2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசின் உத்தரவுகள் சரியாக பிறப்பிக்கப்படுகிறதா என்பதை குழு கண்காணித்து அறிக்கை கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.
இத்தனை தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால் சவாலாகத்தான் பார்க்கிறேன் என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறேன் என்றும், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறு வேலை (WORK FROM HOME) அளிக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தினார்.