அருண் ஜெட்லியின் உடல் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி வயது (66) கடந்த 9-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் 12: 7 மணியளவில் பலனின்றி காலமானார். இதையடுத்து டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட அருண் ஜெட்லி உடலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி ட்விட்டரில், இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு அருண் ஜெட்லியின் உடல் கொண்டு வரப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசிய செயற்குழு தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் கட்சி தலைமையகத்தில் அருண்ஜெட்லிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோரும் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்போது பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து அருண் ஜெட்லியின் உடல் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதை தொடர்ந்து யமுனை நதிக்கரையில் நிகாம் போத் காட் பகுதியில் உள்ள மயானத்தில் இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.