தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார்
தமிழகத்தின் பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெலங்கானா ஆளுநராக நியமனம் செய்தார். இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம் தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா முதல்வர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். பதவியேற்ற பின் தந்தை குமரி அனந்தனின் காலில் விழுந்து ஆசி பெற்றார் தமிழிசை. இதன் மூலம் தெலங்கானா ஆளுநராக பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையை தமிழிசை பெற்றுள்ளார்.
இந்த பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள், உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர் . மேலும் தமிழகம் சார்பில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, ஏசி சண்முகம், சரத்குமார், ராதிகா, தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.