தெலங்கானா முதல்வர் வீட்டு நாய் மரணமடைந்ததையடுத்து சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அங்குள்ள அரசு பங்களா பிரகதி பவனில் வசித்து வருகிறார். இந்த பவனில் 11 நாய்கள் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் ஹஸ்கி வகையை சேர்ந்த 11 மாதமான அந்த நாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனுடைய உடல் கடுமையாக கொதித்தது. அந்த நாய் அப்போதும் சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்துள்ள நிலையில் அதனால் பால் கூட குடிக்க முடியவில்லை. மூச்சு விட மிகவும் சிறமப் பட்டு வந்துள்ளது.

.இந்நிலையில் கடந்த புதன்கிழமை பஞ்சரா ஹில்ஸில் இருக்கும் தனியார் விலங்குகள் நல மருத்துவமனைக்கு அதனை பராமரித்து வந்த ஆசிப் அலி என்பவர் கொண்டு சென்றார். அங்கு கால்நடை மருத்துவர்கள் ரஞ்சித், லட்சுமி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டது.
இதையடுத்து நாயை பராமரித்து வந்த ஆசிப் அலி என்பவர் சரியாக சிகிச்சை அளிக்காததே மரணத்திற்கு காரணம் என்று கூறி கால்நடை மருத்துவர்கள் ரஞ்சித், லட்சுமி ஆகிய இருவர் மீது பஞ்சரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். அதன்பின் போலீசார் அவர்கள் இருவரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.