தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மனைவியை சரமாரியாக வெட்டிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள தென்னம்பிள்ளை வலசை பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சிவபாலா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காதல் திருமணம் செய்துகொண்ட இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவன் மனைவி இருவரும் விவாகரத்து கேட்டு ராமநாதபுரம் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
விசாரணைக்காக சிவபாலா நேற்று காலை கோர்ட்டுக்கு வந்தார். சரவணன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் அடுத்த மாதம் 5ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சிவபாலா கோர்ட்டில் இருந்து வெளியே வேலைப்பார்க்கும் பள்ளிக்கூடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கிருந்து வந்த சரவணன் தன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த சிவபாலா ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அலறி சத்தம் கேட்டு போலீசாரே ஓடி வந்தனர். இதைப் பார்த்த சரவணன் தப்பி ஓடினார். சரவணனை போலீசார் மடக்கி பிடித்து அவரை கைது செய்தனர். போலீசார் சிவபாலாவின் உடலை பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பட்டப்பகலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆசிரியை, அவரது கணவராலேயே சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.