தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மது உற்பத்தி செய்யும் ஆலை  சார்ந்த அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அதில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது. இந்த முறைகேடுக்கு திமுக அரசு துணைபோகி உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. அதோடு எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தது.

இன்று பாஜகவினர் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், காலை முதலே பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கைது செய்யப்பட்டார். இவர்களை காவல்துறையினர் சென்னை அக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் உடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மாலை 6 மணிக்கு மேலாகியும் விடுதலை செய்யாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.