ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் மதுசூதனன் அப்பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மதுசூதனன் தனது நண்பர்கள் 4 பேருடன் ஏரிக்கு குளிக்க சென்றுள்ளார். இதனையடுத்து 5 பேரும் ஏரியில் குளித்துள்ளனர். பின்னர் குளித்து விட்டு கரைக்கு திரும்பும் போது மதுசூதனன் வரவில்லை.
எனவே அவரது நண்பர்கள் 4 பேரும் ஏரியில் நீந்தி சென்று அந்த மாணவனை தேடி பார்த்துள்ளனர். அப்போது அவர் தண்ணீரில் மூழ்கி சடலமாக இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரது உடலை கரைக்கு எடுத்துச் சென்று காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மதுசூதனனின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.