ஜூன் 3 கலைஞரின் பிறந்தநாள் மோடியின் கடைசி நாள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவாரூர் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார்.
மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் , இடதுசாரிகள் , மதிமுக , விசிக , இந்திய ஜனநாயக கட்சி , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மூ.லீ உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன .

இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அவர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராஜு_க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.அப்போது ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது . முக.ஸ்டாலினும் வீதிவீதியாக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் பங்கேற்று ஸ்டாலின் பேசினார் . இதில் , ஸ்டாலின் மத்திய மற்றும் மாநில அரசை கடுமையாக சாடினார். அப்போது ஸ்டாலின் பேசுகையில் , தமிழ்நாட்டில் அதிகமான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்ற ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர் .மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருக்கின்ற பாசிச மோடி அரசை தோல்வியடையச் செய்ய வேண்டும் . மாநிலத்தில் நடைபெறக்கூடிய மத்திய அரசின் கொத்தடிமையாக , எடுபிடியாக இருக்கின்ற எடப்பாடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற உணர்வோடு நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். திமுக சார்பில் அமைந்துள்ள கூட்டணி கொள்கையின் அடிப்படையில் லட்சியப் பிடிப்பு கொண்ட கூட்டணி என்று பேசிய ஸ்டாலின் வருகின்ற ஜூன் 3_ஆம் தேதி கலைஞரின் பிறந்த நாள் பிரதமர் மோடியின் கடைசி நாள் என்று கூறினார்.