மத்திய அமைச்சர்களாக ஸ்மிரிதி இரானி, ரவி சங்கர் பிரசாத், வி. கே சிங் ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
மக்களவை தேர்தலில் வென்றதையடுத்து மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதையடுத்து அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அவர்களுக்கான இலாக்கா ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து அந்தந்த துறைகளை சேர்ந்தவர்கள் பதவியேற்று வருகின்றனர். காங்கிரஸ் கோட்டை என அனைவராலும் கூறப்படும் அமேதி தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் ஸ்மிரிதி இரானி ராகுல் காந்தியை தோற்கடித்தார். அவருக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஸ்மிரிதி இரானி பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் மத்திய சட்டத்துறை அமைச்சராக ரவி சங்கர் பிரசாத்தும், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை இணை அமைச்சராக வி. கே சிங்கும் பொறுப்பேற்று கொண்டனர். அவர்களுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.