அறுந்து கிடந்த மின் கம்பி…. மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன்…. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேங்கை கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதுடைய யுவனேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் தம்பி மகன் நித்திஷ்வரன், யுவனேஸ்வரன் உள்ளிட்ட நான்கு சிறுவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 2 மின் கம்பங்களுக்கு இடையே மின்கம்பி அறுந்து கிடந்தது. இதனை எதிர்பாராதவிதமாக யுவனேஸ்வரனும், நித்திஷ்வரனும் மிதித்தனர்.

இதனால் மின்சாரம் தாக்கி யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் நித்திஷ்வரன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுவனேஸ்வரனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனை அறிந்த கிராம மக்கள், எங்கள் கிராமத்தில் மின் ஒயர் அறுந்து விழுந்து மூன்று நாட்கள் ஆகிறது. இது தொடர்பாக மின்வாரிய அலுவலகத்திற்கு ஏற்கனவே தகவல் தெரிவித்தோம். ஆனால் உடனடியாக அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தான் சிறுவன் இறந்து விட்டதாக குற்றம் சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.