இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் சுபஸ்ரீ (23) தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் கண் இமைக்கும் நேரத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுபஸ்ரீ வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகின்றது. அப்போது தமிழக அரசு, அதிகாரிகள் மற்றும் காவல்துறை மீது கேள்விகளையும் விமர்சனங்களையும் நீதிபதிகள் முன்வைத்தனர். இந்நிலையில் பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி இடைக்கால இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். பின்னர் அதிகாரிகளிடம் வசூலிக்கலாம் என்று கூறியுள்ளது. மேலும் வழக்கை செப்டம்பர் 19-ஆம் தேதி ஒத்திவைத்தது.