விஷ வாயு தாக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வரதராஜபுரம் பகுதியில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியிலிருந்த நீரை அகற்றுவதற்காக ராஜேஷ் என்பவரும், ஏழுமலை என்பவரும் சென்றுள்ளனர். பின்னர் லாரியின் மூலம் கழிவுநீரை ஏற்றிக்கொண்ட அவர்கள் கழிவுநீர் தொட்டியில் அடைப்பு உள்ளதால் அதனை சரிசெய்ய வேண்டும் என்றுகூறி அதில் இறங்கிய போது விஷவாயு அவர்களை தாக்கி உள்ளது.
அதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மணிமங்கலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.