மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விநாயகன். இவர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் விநாயகன் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்று கொண்டு அரைகுறையாக உடை அணிந்து ஆபாசமாக பேசும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து காவல்துறையினரிடம் யாரும் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்தால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையில் அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் தனிநபராகவும், நடிகராகவும் பல பிரச்சனைகளை தன்னால் கையாள முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

என்னிடம் இருந்து வந்த அனைத்து எதிர்மறை ஆற்றலுக்கும் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்குவது வழக்கம். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி குறித்து அவதூறாக பேசியதால், இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அதேபோன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஐதராபாத் விமான நிலையத்தில் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.