சாம்சங் ஸ்மார்ட்ஃபோனில் ஆண்ட்ராய்டு அப்டேட் செய்ய 1,00,00,000 பயனர்கள் தவறான ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்து ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஆண்ட்ராய்டு மொபைல் போன்களை அப்டேட் செய்ய நாம் அனைவரும் உபயோகப்படுத்தும் ஒரே தளம் கூகுள் ப்ளே ஸ்டோர் (Google Play Store). அந்த வகையில் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் சாம்சங் ஸ்மார்ட் போனில் அப்டேட் செய்ய முயற்சி செய்த பயனாளர்களில் சர்வதேச அளவில் சுமார் 1,00,00,000 பேர் தவறாக ஒரு போலி ஆப் ஒன்றை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

பல தரப்பட்ட விளம்பரங்கள், ஆப் அப்டேட் செய்வதற்கு கட்டணம் என பலரையும் விழிபிதுங்கச் செய்துள்ளது இந்த போலி ஆப். இதுபற்றி தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் கூகுளிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்திலிருந்து அந்த போலி ஆப் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இருந்தாலும், சாம்சங் நிறுவனத்துக்கு சிறிதும் தொடர்பில்லாத Updates for Samsung என்ற போலி ஆப் உங்களது ஸ்மார்ட்ஃபோனில் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அதனை டெலிட் செய்து விடுங்கள் என சமூக வலைதளங்களில் சக பயனாளர்கள் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். மேலும், சாம்சங் நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்படும் அனைத்து ஆஃப்களுமே இலவசமாகவே ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளன. ஆகவே, போலி ஆஃப்கள் எதையும் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று பயனாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.