கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூர் சிவசக்தி நகரில் 32 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் இன்ஸ்டாகிராமில் பகுதிநேர வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் இணையதளத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார்.
இதனை நம்பி அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அந்த பெண் 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகு மர்ம நபர்களிடம் இருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பெண் கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.