குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பிரபல டி.வி தொடர் இயக்குனரின் மனைவி தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் அன்பு நகர் இரண்டாவது தெருவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நாகரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிவி தொடர் இயக்குனராக இருக்கிறார். தற்போது நாகரத்தினம் பாண்டவர் இல்லம் தொடரை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே வாணி ராணி, செவ்வந்தி உள்ளிட்ட டிவி தொடர்களை இயக்கி உள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார்.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு நவினேஷ்(15), சாய் ஆதர்ஷ் (8) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் நாகரத்தினம் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு சென்று மகன்களை தாத்தா, பாட்டி வீட்டில் விட்டுவிட்டு மனைவியுடன் சென்னைக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் வீட்டிலிருந்த நகைகளை அடகு வைத்து தொழிலில் முதலீடு செய்யுமாறு பத்மாவதி தனது கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு தொழிலில் முதலீடு செய்வதே விட சொந்த ஊரில் நிலம் வாங்கலாம் என நகரத்தினம் கூறியதால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் டிவி தொடர் படப்பிடிப்புக்கு சென்று விட்டு நேற்று அதிகாலை நாகரத்தினம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போதும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே சொந்த ஊரிலிருந்து நேற்று காலை சென்னை திரும்பிய மகன்களை அழைத்து வருவதற்காக நாகரத்தினம் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது பத்மாவதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

திரும்பி வந்த நாகரத்தினம் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பத்மாவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.