கள்ளக்குறிச்சியில் கணவனை இழந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் செல்வம்- கண்மணி. இவர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு 11 வயதில் விஷ்ணு என்ற மகனும் 9 வயதில் சிவனேசன் என்ற மகனும் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்வம் இறந்துவிட்டார். இதையடுத்து கண்மணி திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தில் பெட்டிக்கடை ஒன்று நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்த கண்மணி திடீரென மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
தீயின் வெப்பம் தாங்க முடியாததால் அவர் அலறியுள்ளார். கண்மணியின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கண்மணியின் உடலில் பற்றிய தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.