ரவீந்திரநாத் பாராளுமன்ற உறுப்பினர் என்று எழுதப்பட்ட கல்வெட்டை அகற்ற துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அ.தி.முக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அ.ம.முக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார். நாளை மறுநாள் 19-ம் தேதி மீதமுள்ள திருப்பரங்குன்றம் , அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, மே 23-ம் தேதி 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு பதிவு எண்ணிக்கை நடைபெறும்.

ஆனால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே துணை முதல்வர் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார். எப்படியென்றால் ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், குச்சனூரில் இடம்பெற்றுள்ளது. காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி செய்ததாக கடந்த 16-ம் தேதியன்று ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தேனி குச்சனூர் கோயிலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என்றும், தனியார் கோயில் சார்பில் நன்கொடையாளர் வழங்கிய கல்வெட்டை அகற்றுவதற்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி தொகுதி அ.ம.முக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.